
ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த கெடாரை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் வினோத் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த பிரியா (25) என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிருதிவின் (5) என்ற மகன் உள்ள நிலையில், வினோத் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஐயப்பன் நகரில் உமா மகேஸ்வரி என்பவரின் வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
பெருந்துறையில் உள்ள ஒரு லேத் பட்டறையில் வினோத் பணியாற்றி வந்த நிலையில், பிரியா திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியின் பேருந்தில் தினமும் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி விடுவார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வினோத் – பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். இந்த பிரச்னை காரணமாக, பிரியா வீட்டுக்கு வராமல், வேலை செய்யும் இடத்திலேயே தங்கியுள்ளர். இதனால் கணவன், மனைவி இருவரிடையே விரிசல் அதிகமானது.
இதனிடையே, நேற்று நீண்ட நேரமாகியும் வினோத் வீட்டு கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே பார்த்தபோது வினோத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காதல் மனைவி தன்னையும் மகனையும் விட்டு பிரிந்து சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத வினோத், தனது 5 வயது மகனான பிருத்திவினை நைலான் கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு, அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையில் 5 வயது மகனை கொன்று, தந்தை தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.